adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 194 (03.07.18)

எஸ். முத்துமாரியப்பன், சென்னை-81.

கேள்வி :

திருமணமாகி இரண்டரை வருடங்களாகியும் இன்னும் குழந்தைச் செல்வம் கிடைக்கவில்லை. எப்போது அந்த பாக்கியம் கிடைக்கும்? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா?

பதில் :
ரா
கணவன் 25.11.1983 மதியம் 3.5 கோவில்பட்டி
சந்
 
சூ பு கே குரு சனி சுக் செ
சந் கே
மனைவி 28.9.1991 இரவு 8.26 சென்னை
சனி சுக் குரு
ரா சூ பு செ

கணவனின் ஜாதகத்தில் ஐந்தாமிடத்தை உச்ச சனி பார்ப்பதும், புத்திர காரகன் குரு ராகு-கேதுக்களுடன் இணைவதும் புத்திர தோஷம். இதேபோன்ற அமைப்பு மனைவிக்கும் இருக்கிறது. மனைவிக்கு மேஷ லக்கினமாகி ராகு தசையில் ஆறுக்குடைய புதன் புக்தி நடப்பது குழந்தை பாக்கியத்திற்குத் தடை. மேசத்திற்கு புதன் நன்மைகளைத் தர மாட்டார் என்பதோடு கிடைக்க இருக்கும் பாக்கியங்களையும் தடுப்பார்.

2019 மார்ச்வரை குழந்தைச் செல்வத்திற்கு தடை இருகிறது. குருவிற்குரிய முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். ஜென்ம நட்சத்திரம் அன்று முதல் நாள் மாலையே ஸ்ரீ காளஹஸ்தியில் தங்கி ருத்ராபிஷேகத்தில் கலந்து கொள்ளுங்கள். அடுத்த வருட இறுதியில் நிச்சயம் குழந்தை உண்டு. வாழ்த்துக்கள்.

கே.ஆர் ஜெயக்குமார், கவுண்டன்பாளையம்.

கேள்வி :

மானசீக குருவின் பாதம் பணிகிறேன். எனது ஜாதகத்தில் லக்னாதிபதி ஏழில் நீசபங்கமாக இருக்கிறார். ஐந்தாமிடத்தில் சந்திரன், சுக்கிரன், செவ்வாய், சனி, ராகு என ஐந்து கிரகங்கள் ஒன்று கூடியிருக்கின்றன. இவற்றில் சுக்கிரன் ராகுவுடன் ஒரே டிகிரியில் அஸ்தமனமாக இருக்கிறார். செவ்வாயும் ராகுவுடன் ஐந்து டிகிரிக்குள் அஸ்தமனம் ஆகிவிட்டார். இவர்கள் இருவரும் தங்களது காரகங்கள், ஆதிபத்தியங்களை ராகுவிடம் இழந்து விட்டனர். ஏழரைச் சனி வேறு ஆரம்பித்துவிட்டது இதுவரை வேலை இல்லை. ராசிக்கு ராகு,கேது சம்பந்தம், புனர்பூ தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், கேந்திராதிபத்திய தோஷம் என்று ஜாதகம் குழப்பமாக இருப்பது போலவே வாழ்க்கையும் குழப்பமாகத்தான் இருக்கிறது. செவ்வாய் ஐந்து டிகிரிக்குள் ராகுவுடன் இருப்பதால் ஆயுள்பலம் உண்டா? வேலை, திருமண அமைப்பு உண்டா? புதன் சந்திர கேந்திரத்தில் இல்லாததால் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியுமா? தயவு செய்து வழிகாட்டுங்கள் குருவே.

பதில் :
சூ பு குரு
22.3.1990 இரவு 7.18 கோவை
கே
சந் சுக் செ சனி ரா  

ராகுவுடன் மற்ற கிரகங்கள் நெருங்கி இணைவது கிரகண தோஷம் என்று சொல்லப் படுகிறது. அதற்கு பெயர் அஸ்தமனம் இல்லை. சூரியனுடன் கிரகங்கள் நெருங்கி இருந்தால்தான் அஸ்தமனம் அடையும். அதாவது ஒரு கிரகம் இருட்டில் கிரகண தோஷத்தையும், அதிக ஒளியில் அஸ்தமன தோஷத்தையும் அடையும்.

லக்னாதிபதி நீசம் அடைந்தால் முற்பகுதி வாழ்க்கையில் நீங்கள் கடிதத்தில் சொல்லி இருப்பது போல குழப்பமான வாழ்க்கைதான் அமையும். அதே நேரத்தில் உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் பத்தாமிடத்தில் உள்ள குருவுடன் பரிவர்த்தனை நிலையில் இருப்பதால் நீசபங்கம் அடைகிறார். நடப்பு தசாநாதன் ராகு, நான்கு கிரகங்களை பீடித்திருப்பதால் கலப்பு பலன்களைத் தான் செய்வார்.

ராகுதசை முடியும் வரை நிரந்தரமான வேலை அமைப்புக்கு வாய்ப்பு இல்லை. நடைபெறும் ஏழரைச் சனியும் அதனை உறுதி செய்கிறது. புதன் நீசபங்கமாக இருப்பதால் ஜோதிட அறிவு வரும். ஜோதிடத்தை நீங்கள் தொழிலாகவும் செய்யலாம் இன்னும் நிறைய கற்றுக் கொள்ளுங்கள். லக்னாதிபதி நீசபங்கம் பெற்றதால் ஆயுள் குற்றமில்லை.

ஏழரைச் சனி முடிந்ததும் வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். அதுவரையில் குழப்பத்தில்தான் இருப்பீர்கள். ஜாதகத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அதிலுள்ள தோஷங்களை எல்லாம் கணக்கிட்டு கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால் வாழ முடியாது. எல்லாம் விதிப்படி நடக்கும் என்பதை மனதில் நிறுத்தி, அனைத்துப் பொறுப்பையும் பரம்பொருளிடம் ஒப்படைத்து விட்டு வேலை தேடுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். வாழ்த்துக்கள்.

என். தியாகராஜன். தரமணி.

கேள்வி :

மூத்த மகளின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். வரப் போகும் ராகு தசையை நினைத்து மிகவும் கவலைப்படுகிறார். ராகு தசை எப்படி இருக்கும்?

பதில் :

கலியுகத்தில் ஒருவரை அவரது முன் ஜென்ம கர்மவினைகளின்படி வாழ வைக்கும் ராகு, ஜாதகத்தில் ரிஷபத்தில் இருக்கும்போது கெடுதல்களைச் செய்ய மாட்டார். ரிஷபராகு நல்லவர். கூடுதலாக அவருக்கு சுப தொடர்புகள் ஏற்படுமாயின் இன்னும் நன்மைகளைச் செய்வார்.

மகளின் ஜாதகத்தில் ராகு, 4-ம் இடமான ரிஷபத்தில் அமர்ந்து வளர்பிறைச் சந்திரன், சுக்கிரன், புதன் ஆகியோரின் பார்வையை பெற்றிருப்பதால் கெடுதல்கள் எதையும் செய்ய வாய்ப்பில்லை அதைவிட மேலாக கடந்த இருபது வருடங்களாக நடந்து வந்த சூரிய, சந்திர, செவ்வாய் தசைகளை விட ராகு தசை மகளுக்கு யோகமான தசைதான். கேட்டை நட்சத்திரம் என்பதால் கடந்த ஐந்து ஆண்டு காலமாக நடைபெற்ற கடுமையான கெடுபலன்களால் மகளுக்கு பயம் இருக்கத்தான் செய்யும். இனிமேல் நன்றாக இருப்பார். வாழ்த்துக்கள்.

பா. வினோதன். யாழ்ப்பாணம்.

கேள்வி :

என்ன முயற்சி செய்தாலும் தோல்வி மட்டுமே நிலையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளுக்குப் போக முயற்சி செய்தும் முடியவில்லை. தற்போது சிறிய நாடு ஒன்றில் தங்கி இருக்கிறேன். ஏஜென்சியால் தினமும் ஏமாற்றம் அடைகிறேன். எனக்கு ஐரோப்பிய நாடு செல்லும் யோகம் உண்டா? எப்போது? அல்லது தாய்நாட்டில் அரச தொழிலுக்கு பலன் இருக்கிறதா? நிரந்தர தொழில் இல்லாததால் திருமணம் தடைபடுகிறது. எப்போது திருமணம்?

பதில் :
பு சூ ரா சுக்
குரு
18.4.1986 காலை 10.2 யாழ்ப்பாணம்
சந்
 
செ சனி கே

ஜோதிடத்தில் பரதேச வாசம் என்று சொல்லக்கூடிய வெளிநாட்டில் இருப்பதை குறிக்கும் 12-க்குடைய சுக்கிரன், ராகுவுடன் இணைந்து, 13 டிகிரிக்கு மேல் விலகி, சர ராசியான மேஷத்தில் அமர்ந்து தசை நடத்துவதால் சுயபுக்திக்கு முடிந்து 2019 ஏப்ரலுக்கு பிறகு ஐரோப்பிய நாட்டிற்கு நீங்கள் செல்ல முடியும்.

சுக்கிர தசையை அடுத்து வரும் சூரிய, சந்திர தசைகளின் அதிபதிகள் சர ராசியான மேஷம், கடகத்தில் இருப்பதால் நீங்கள் நீடித்து வெளிநாட்டில் இருப்பீர்கள். 2, 9, 11ம் பாவங்கள் சுபத்துவமாகி இருப்பதால் அடுத்த வருட ஆரம்பத்தில் வரும் அக்டோபருக்குப் பிறகு நல்ல வேலை அமையும். லக்னாதிபதி நீசம் அடைந்தாலே வாழ்க்கையின் முற்பகுதி போராட்டமாகத்தான் இருக்கும். பிற்பகுதியில் அனைத்தும் கிடைத்து நல்ல வாழ்க்கை இருக்கும். ஏழில் செவ்வாய் இருப்பதால் தாமத திருமணம்தான். 33 வயது முடிந்ததற்கு பிறகு 2020 ஆரம்பத்தில் திருமணம் நடக்கும்.

ஏன் எனக்கு எதுவுமே அமையவில்லை?

ஏ-விஜயன். திருநெல்வேலி.

கேள்வி :

1991ல் அன்றைக்கு மிகவும் பிரபலமாக இருந்த ஒரு ஜோதிடர் எனக்கு அரசு வேலை கிடைக்கும் என்று சொல்லியும் கிடைக்கவில்லை. 58 வயது ஆகியும் இதுவரை திருமணமாகவில்லை. நல்ல கல்வித் தகுதி இருந்தும் நிலையான வேலை இல்லை. அரசு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற 91 வயது தகப்பனாரின் ஓய்வூதியம்தான் நிலையாக இருக்கிறது. தற்சமயம் வேலையின்றி இருக்கிறேன். பெட்ரோல் பங்க் நடத்த வாய்ப்புள்ளதா? எனக்கு ஏன் இதுவரை நல்லது எதுவும் நடக்கவில்லை? தற்போது நடக்கும் சனி தசை நன்மை செய்யுமா?

பதில் :
சூ கே ல சந்
பு செ சுக்
31.3.1960 காலை 10.6 நாகர்கோவில்
 
குரு சனி ரா

ஒரு மனிதனில் வாழ்வில் அவனது இருபது முதல் ஐம்பது வயதுள்ள கால கட்டம்தான் மிக முக்கியமான பருவம் ஆகும். மேற்கண்ட பருவத்தில் ஜோதிடப்படி ஒருவருக்கு அனைத்து சுகங்களையும் அந்த பருவத்திற்கேற்ப கொடுக்கக் கூடிய தசைகள் வர வேண்டும்.

அப்போதுதான் அந்த வயதில் நியாயமாகக் கிடைக்க கூடிய நல்ல வேலை, நீடித்த தாம்பத்திய சுகத்திற்காக திருமணம், அந்திம காலத்தில் துணையிருக்க புத்திர பாக்கியம் போன்றவைகள் கிடைக்கும் மேலே நான் சொன்ன வயதுகளில் பாபத்துவம் அடைந்த     கிரகங்களின் தசைகளோ, பாபர்களின் தசைகளோ நடந்தால் இவைகள் எதுவும் ஒருவருக்கு கிடைக்காது.

இருபது வயது முதல் உங்களுக்கு நடந்த பாபத்துவம் பெற்ற ராகுவின் தசையும், அடுத்து நடந்த எட்டுக்குடைய பாபியான குருவின் தசையும் நன்மைகள் எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. ராகுவிற்கு செவ்வாய், சனி இணைவோ, தொடர்பு மற்றும் பார்வையோ ஏற்பட்டால் நன்மைகளைச் செய்ய மாட்டார். செவ்வாய், சனி இருவரும் சேர்ந்து பார்க்கும் நிலையில் ராகுவால் கெடுதல்கள் அதிகமாக இருக்கும்.

உங்கள் ஜாதகப்படி ராகு கன்னியில் இருந்தாலும், செவ்வாயின் எட்டாம் பார்வையும், சனியின் பத்தாம் பார்வையும் அவருக்கு அமைந்து, லக்னாதிபதியின் பகைவரான சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமர்ந்ததால், வாழ்க்கையின் மிக முக்கிய பருவமான 20 முதல் 38 வயது வரை உங்களுக்கு எதையும் தருவதற்கு சக்தியற்றுப் போனார்.

அடுத்து 38 வயதிற்கு மேல் ரிஷப லக்னத்திற்கு வரக் கூடாத குருவின் தசை நடந்தது. குரு, அஷ்டமாதிபதியான தன் வீட்டில் இருக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் இருந்து தசை நடத்தியதால் 54 வயது வரை வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான எந்தவிதமான நன்மைகளையும் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.

ரிஷப லக்னத்திற்கு குருவின் தொடர்புகள் ஏற்படும் அனைத்து கிரகங்களும் தீமைகளையே செய்யும். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்த லக்னாதிபதி சுக்கிரனும், தன, குடும்பாதியான 2 5-க்குடைய புதனும் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்ததால் நிலையான உத்தியோகத்தையும், குடும்பத்தையும் தரவில்லை.

நடக்கும் தசாநாதன் சனி, குருவோடு இணைந்து சுபத்துவம் ஆகியிருப்பதாதாலும், சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் அமைந்திருப்பதாலும், சுயபுக்தி முடிந்த பிறகு புதன் புக்தியில் இருந்து, வயதிற்கேற்ற பலன்களைச் செய்யும். நீசத் திரவம் எனப்படும் பெட்ரோலுக்கு அதிபதி சனி என்பதால், சனி தசையில் பெட்ரோல் சம்பந்தப்பட்ட தொழிலை செய்ய முடியும்.

வாழ்க்கையின் கடைசி காலத்தில், ஐம்பது வயதிற்கு மேல் ரிஷபத்தின் யோகாதிபதிகாளன சனி, புதன் தசைகள் வருவதால் இனிமேல் நிம்மதியாக இருக்க முடியும். எட்டுக்குடையவனும், ஆயுள்காரகனும் வலுவாக இருப்பதால் உங்கள் தந்தையைப் போலவே நீங்களும் தீர்க்காயுளாக இருப்பீர்கள். ஜாதகப்படி வாழ்வின் முற்பகுதியில் எதையும் பருவத்திற்கேற்ப நீங்கள் அனுபவிக்க முடியாது என்பது பரம்பொருள் வகுத்த விதி. இனிமேல் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Site is undergoing maintenance

adityaguruji

Maintenance mode is on

Site will be available soon. Thank you for your patience!

Lost Password