adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
காரஹோ பாவநாஸ்தியும், காதலைத் தூண்டும் ராகு-கேதுக்களும்..! – A-001

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

(2011ல் வெளிவந்த குருஜி அவர்களின் முதல் கட்டுரை)

ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடர்களுக்கு என்றென்றும் விவாதப் பொருளாகவும், விளங்காப் பொருளாகவும் இருப்பது நிழல்கிரகங்களான ராகு-கேதுக்கள்தான்.

ராகு, கேதுக்கள் என்பவை நிஜமான கிரகங்கள் அல்ல. அதாவது ராகு, கேதுக்கள் ஏனைய கிரகங்களைப் போல கல், மண், நீர், வாயு போன்றவைகளால் ஆனவை அல்ல. இவைகளுக்கு பருப்பொருளும், சக்தியும் கிடையாது. இவைகள் வெறும் தோற்றங்கள் மட்டுமே. சூரியப் பாதையும், விரிவுபடுத்தப்பட்ட சந்திரப் பாதையும் சந்தித்துக் கொள்ளும் இரண்டு புள்ளிகளே ராகு-கேதுக்கள்.  இவை ஒரு நிழலாகிய இருட்டுக்கள்தான். சூரிய, சந்திரர்களை மறைப்பதினால் மட்டுமே இவைகளை நம்மால் உணர முடியும்.


ராகு-கேதுக்களுக்கு 3,7,11 பார்வை உண்டு எனச் சிலர் கூறுகின்றனர். கிரகங்களின் பார்வை என்பதே அதன் ஒளிப் பிரதிபலிப்புத்தான் எனும்போது, ஒளியே இல்லாத, ஒளியைப் பிரதிபலிக்கவும் முடியாத நிழல்களுக்கு, அதாவது வெறும் இருளுக்கு பார்வை இருப்பது என்பது இயலாத ஒன்றாகத் தெரிகிறது. எனவே ராகு-கேதுக்களுக்கு பார்வை பலம் இல்லை என்பதே என் கருத்து.

ஆனால் ராகு-கேதுக்கள் ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் வலம் வருபவை என்பதால் ஒன்று, மற்றொன்றின் ஏழாம் பாவகத்தில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். அதனை ஏழாம் பார்வை என்பது பொருத்தமற்றது.

சந்திரனால் உருவாகும் நிழல் கிரகங்கள் இவை என்பதால், சந்திரன் உச்சம் பெறும் ரிஷபத்தில் ராகு நல்லபலன்களையும், விருச்சிகத்தில் தீய பலன்களையும் செய்வார். மிகப் பெரிய பாபத்துவம் இருந்தால் ஒழிய ரிஷப ராகு எவரையும் கெடுப்பது இல்லை.

ஒரு ஜாதகருக்கு ராகு-கேது தசைகள் நன்மையைச் செய்யுமா என்று கணிப்பது பெரும்பாலான ஜோதிடர்களுக்கு ஒரு சவால்தான். அதிலும் அவை சொந்த நட்சத்திரத்தில் இருந்து விட்டால் தலை சுற்ற ஆரம்பித்து விடும்.

ரிஷப, மிதுன, கன்னி, துலாம், மகர, கும்ப லக்னக்காரர்களுக்கு ராகு கெடுதல் செய்யும் நிலையில் இருந்தாலும், தீயபலன்களை பெரும்பாலும் செய்வதில்லை. அதேபோல மேஷம், விருச்சிகம், தனுசு, மீனம் லக்னக்காரர்களுக்கு கேது தீயபலன் செய்வது இல்லை.

தான் இருக்கும் வீட்டின் அதிபதியின் பலத்தையும், தன்னைப் பார்க்கும், மற்றும் தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் பலத்தையும் கவர்ந்து அவைகளின் நன்மை தீமைகளை தனது தசை, புக்திகளில் மிக வலுவாகச் செய்வன ராகு-கேதுக்கள்.  சார பலம் கூட ராகு கேதுக்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.

மிதுன லக்னத்திற்கு ராகு யோகர் என்ற கருத்து பரவலாக உள்ளது. அனுபவத்திலும் அது சரியாகவே உள்ளது. லக்ன பாபிகள் சம்பந்தம் பெறாதவரை ராகு-கேதுக்கள் எவரையும் கெடுப்பதில்லை. கடக, சிம்ம லக்னத்தினருக்கு இவை 3, 6, 11 மிடங்களில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை அளிக்கின்றன.

”காரஹோ பாவ நாஸ்தி” எனப்படும், காரகன் காரக வீட்டில் இருந்தால், அந்த வீடு கெடும் என்பதை பெரும்பாலும் செயல்படுத்துவது ராகு-கேதுக்களே ஆகும்.

இந்த ஜாதகத்தினை கவனியுங்கள்.

இந்த ஜாதகத்தில், சகோதரகாரகனாகிய செவ்வாய், இளைய சகோதர ஸ்தானமாகிய மூன்றாமிடத்தில் உள்ளார். இந்தச் செவ்வாய் ஆறாமிடத்திலுள்ள கேதுவைப் பார்க்கிறார். அதாவது கேது, தன்னைப் பார்க்கும் செவ்வாயின் காரகோ பாவ நாஸ்தி அமைப்பை செயல்படுத்தும் நிலையைப் பெறுகிறார். மேற்கண்ட ஜாதகர் தனது செவ்வாய் தசை, கேது புக்தியில் தான் மிகவும் நேசித்த இளைய சகோதரனை விபத்தில் இழந்தார்.

எனது நீண்டகால அனுபவப்படி, எப்பொழுதுமே ராகு தசைக்கோ, புக்திக்கோ பலன் சொல்ல வேண்டுமெனில், கேதுவின் பார்வையிலும், கேதுவுக்கு பலன் சொல்ல வேண்டுமெனில் ராகுவின் பார்வையிலும் தான் பலன் சொல்ல வேண்டும்.

ஒரு கிரகம் ராகுவின் சாரம் பெற்றிருந்தால், கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ, அந்த ஸ்தான பலனும், அவரின் காரகத்துவமும் நடக்கும். கேதுவின் சாரம் பெற்றிருந்தால், ராகு எந்த ஸ்தானத்தில் இருக்கிறாரோ அதன் வழியே, அந்த ஸ்தான பலனும். ராகுவின் காரகத்துவங்களும் நடக்கும். ராகு-கேதுக்கள் இரண்டும் ஒரே நேர்கோடுகள் என்பதால் எதிரில் உள்ள ஸ்தானத்தின் நன்மை, தீமைகளையும் செய்யும்.

எதையுமே நேரிடையாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் நமது மூல நூல்களில், 3, 11மிட ராகு-கேதுக்கள் அபாரமான நன்மையைச் செய்யும், என்ற கருத்தின் உண்மையான அர்த்தமே, இந்த இடங்களில் ராகு-கேதுக்கள் இருந்தால் அந்த இடங்களுக்கு எதிர்முனையான 5, 9 எனும் திரிகோண ஸ்தானத்தில் அதன் இன்னொரு முனை கிரகம் இருக்கும் என்பதுதான். உண்மையில் 3, 11மிடத்தில் இருக்கும் கிரகம் செய்யும் நன்மையை விட, அதன் மறுமுனையான திரிகோண சுப வீட்டில் இருந்து, சுபரான இன்னொரு ராகுவோ, கேதுவோதான் நன்மையைச் செய்கிறது என்பதே உண்மை.

பலன்கள் சொல்லும் பொழுது பெரும்பாலும் ராகு-கேதுக்கள் ஒரே கிரகமாகவே கருதப்பட வேண்டும். மிக நுட்பமாகவே இவைகளை பிரித்தறிய வேண்டும்.

பருவ வயது பெண்களின் ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் சனி, செவ்வாய் சம்பந்தப்பட்டு பாபத்துவமாகி, எட்டாமிட தொடர்பு, அல்லது அஷ்டமாதிபதி சம்பந்தப்பட்டிருந்து, அவர்களின் தசையோ, புக்தியோ நடைபெறுமானால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணை கற்பிழக்கச் செய்பவர்கள் ராகு-கேதுக்கள்தான்.

எட்டாமிடத்தில் ராகு-கேதுக்கள் இருப்பதாலேயே ஒரு பெண் காதல் வயப்பட்டு விட மாட்டார். ஆனால் அஷ்டமாதிபதியுடன் சேர்ந்து, சிக்கலான இடங்களில் இருந்தால் பெற்றோர்களுக்கு நிம்மதி இழப்புத்தான்.

சில பெண்கள் தனக்கு முற்றிலும் தகுதியற்ற, சிறிதும் பொருத்தம் இல்லாத நபர்களைத்தான் மணப்பேன் என்று பெற்றோரிடம் பிடிவாதம் பிடிப்பதும் அவர்களுடன் ஓடிப் போய் தனது வாழ்க்கையைத் தொலைப்பதும் இந்த பாபத்துவ ராகு-கேதுக்களினால்தான்.

உதாரண ஜாதகத்தைப் பாருங்கள்.

ராகு தசை ஆரம்பித்ததும் மேற்படி பெண்ணிற்கு காதல் அனுபவங்கள் ஏற்பட்டன. இஞ்சினியரிங் படித்த இந்தப் பெண் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவரைத் திருமணம் செய்வேன் என்று ஒற்றைக்காலில் நின்று அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

ஆறாம் வீட்டில் எட்டாம் அதிபதியுடன் இணைந்து, சனி-செவ்வாயின் தொடர்பினை மட்டும் பெற்ற பாபத்துவ ராகு இப்பெண்ணின் மனதை முழுமையாக ஆளுமை செய்கிறார். கண்களை மூடிக் கொண்டு இந்தப் பெண் கிணற்றில் விழுவதை யாரால் தடுக்க முடியும்?

ஒரு ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் கெடுதல் தரும் வலிமையைப் பெற்று விட்டால் அந்த ஜாதகரை பரம்பொருள் அன்றி வேறு எவராலும் காப்பாற்ற இயலாது. அதேபோல் ராகு-கேதுக்கள் மட்டுமே சுபத்துவம் பெற்றிருந்து, மற்ற கிரகங்கள் கெட்டிருந்தாலும், ராகு-கேதுக்களின் தசை வந்தவுடன் அனைத்து யோகங்களும் செயல்பட்டு அந்த ஜாதகர் யோக வாழ்வே வாழ்வார்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

[ஜூலை 6-12,2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.]