adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 175 (20.2.18)

பி.எஸ்.மலையப்பன், சென்னை.

கேள்வி:

சேக்கிழார் பெருமான் அவதரித்த குன்றத்தூர் அருகே உள்ள பூந்தண்டலம் கிராமத்தில் இருக்கும் பழமையான சிதிலமடைந்த சிவன் கோவிலை அடியார்களின் முயற்சியுடன் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சீரமைத்து ஏழாண்டு காலமாக   ஒரு கால பூஜைசெய்து வருகிறேன். ரிட்டையர்ட் ஆனபோது இருந்த வசதியில் இவற்றை செய்தேன். 70 வயதாகும் எனக்கு தற்போது எனக்கு எந்த வித வருமானமும் இல்லை. ஐயர் சம்பளம் உள்பட கோவிலுக்கு மாதம் 15 ஆயிரம் செலவாகிறது. கோவிலில் உள்ள 22 சுவாமிகளுக்கும் முறையான அபிஷேகம், ஆராதனை நடந்துவருகிறது. வரும் காலங்களில் இதை நீடித்து செய்ய முடியுமா என்று பயமாக உள்ளது. இறை பணி செய்ய எனக்கு வசதி வருமா என்று கூறவும்.

பதில்:
ராகு சந்
சு 22-1-1948 இரவு 7.00 மணி சென்னை ல சனி
சூ பு செவ்
 குரு கேது
(கடகலக்னம் ரிஷபராசி 1ல் சனி 2ல் செவ் 4ல் கேது 5ல் குரு 7ல் சூரி, புத 8ல் சுக் 10ல் ராகு 11ல் சந் 22-1- 1948 இரவு 7.00 மணி சென்னை)

லக்னம், ராசியோடு சுபத்துவ சனி, குரு, கேது தொடர்பு கொண்டாலே ஆன்மிகப் பணி செய்ய முடியும், தெய்வ அருளும் கிடைக்கும் என்று அடிக்கடி எழுதி வருகிறேன். ஜாதகப்படி உங்களுக்கு கடக லக்னமாகி உச்சம் பெற்ற லக்னாதிபதி சந்திரனையும், லக்னத்தையும் வலுப்பெற்ற குரு பார்க்கிறார். லக்னத்தில் சனி அமர்ந்த நிலையில் சனிக்கும் குருபார்வை இருப்பதால் நடுத்தர வயதில் இருந்தே உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருந்திருக்கும். நடைபெறும் தசையின் நாதன் புதனையும் சனி பார்ப்பதால் இறுதி வரை தொய்வில்லாமால் இறைபணி செய்வீர்கள்.

கூடுதலாக உங்கள் ஜாதகத்தில் சர, ஸ்திர ராசிகளில் மட்டும் கிரகங்கள் ஒரு வளையம் போல தொடர்ச்சியாக அமர்ந்துள்ளது ஒரு சிறப்பான அமைப்பு. அதாவது ஆபோக்லிய ஸ்தானங்கள் என்று சொல்லப்படக் கூடிய உங்கள் ஜாதகத்தின் உபய ராசிகளான 3,6,9,12 மிடங்களில் மட்டும் கிரகங்கள் இல்லாமல் இருப்பதால் இறுதிவரை நினைத்த காரியத்தை செய்த மகிழ்ச்சியில் இருக்க முடியும். எனவே கோவிலுக்குச் செய்ய வருமானம் வராதோ என்று கவலைப்பட வேண்டாம். தேவைக்கு அவன் படியளக்கவே செய்வான்.

பெ.சிதம்பரம், கிருஷ்ணகிரி.

கேள்வி:

காலத்தால் காக்கப்பட வேண்டிய ஜோதிடப் பொக்கிஷங்களை கொடுத்த ஜோதிட சக்கரவர்த்திக்கு வணக்கம். உங்கள் பதிவுகளில் வக்ரகிரகத்தின் சூட்சுமம் என்ற ரத்தினம் மட்டும் கிடைக்கவில்லை. நீசவக்ரம் பெற்ற கிரகம் உச்சபலனைத் தரும். உச்சவக்ரம் அடைந்த கிரகம் நீசபலனைத் தரும் எனில் ராசியில் சுபத்துவமடைந்த வக்ர சனி நவாம் சத்தில் உச்சம் பெற்றால் அது உச்ச பலனைத் தருமா? அல்லது நீச பலனை தருமா? அதே போல பவுர்ணமி சந்திரன் ஏழாம் பார்வையாக சனியை சுபத்துவப்படுத்துவதற்கும், அமாவாசையில் உள்ள உச்ச சந்திரன் ஏழாம் பார்வையாக சனியைபார்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டினை உங்களதுகட்டுரைகளை மட்டும் படித்தே ஜோதிடத்தின் மீது ஆர்வம் கொண்ட அடியேனுக்கு புரியவைக்க வேண்டுகிறேன்.

பதில்:

மாலைமலரில் “ஜோதிடம்எனும்தேவரகசியம்” கட்டுரைகளை எழுத ஆரம்பிக்கும் போது எனக்கு லேசான தயக்கம் இருந்தது. இந்த ஆய்வுக் கட்டுரைகள் அனைவருக்கும் புரியுமா? இன்னும் சொல்லப் போனால் ஆரம்ப நிலையில் உள்ள ஜோதிடர்களுக்கு புரியுமா? அல்லது எளிமைப்படுத்தும் முயற்சியில் நான் தோற்று விடுவேனா என்ற பயத்துடன் தான் சூட்சும விளக்கக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன்.

ஆனால் கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்தபின் உங்களைப் போன்ற ஜோதிடர் அல்லாத, ஜோதிடமே தெரியாதவர்கள்ன் கூடபுரிந்து கொள்கிறோம், படித்துக் கொண்டிருக்கிறோம் என்று நூற்றுக்கணக்கில் கடிதம் எழுத ஆரம்பித்ததும் அத்தனை தயக்கங்களும் விலகி சற்று விளக்கமாகவே எழுத ஆரம்பித்தேன். ஜோதிடம்எனும்தேவரகசியம் ஆய்வுக் கட்டுரைகளின் மிகப்பெரிய வெற்றிக்கு உங்களை போன்றவர்களே காரணமாவார்கள்.

நீங்கள் கேட்டிருக்கும் பவுர்ணமிசந்திரன், அமாவாசை சந்திரன் கேள்வி மிகவும் நுணுக்கமானது. ஜோதிடர்கள் தடுமாறும் இடங்கள் இவை. இன்னும் தெளிவாகச் சொல்லபோனால் இப்படியும் பலன் அறிய வேண்டுமா என்பது பல ஜோதிடர்கள் அறியாதது. ஜோதிடத்தில் சந்திரனைப்பற்றிய பலன் அறியும்போது ஜாதகர் பிறந்த அன்று வானத்தில் சந்திரன் இருந்த நிலையின் ஒளி அளவுகளோடு புரிந்து கொள்வது கூடுதலாக பலன்களைத் துல்லியமாக்கும். பிறந்த அன்று வானில் சந்திரன் இருந்த நிலையோடு கூடுதலாக சந்திரனின் ஆட்சி, உச்ச, நீசநிலைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

பூமிக்கு மிக அருகில் இருந்து உயிர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஜீவஒளியைத் தருகின்ற சூரியனைப் போல ஒரு தவிர்க்க இயலாத கோள் சந்திரன் என்பதால்தான் அதற்கு எந்த ராசியும் பகை இல்லை என்று சொல்லப்பட்டது.  எனவே அமாவசை சந்திரனின் பார்வைக்கு இருக்கும் வலுவை விட ,பவுர்ணமிச் சந்திரனின் பார்வைக்கு சிறப்பு அதிகமாக இருக்கும். இரண்டும் ஒன்றல்ல.

கிரகங்களின் வக்ர நிலையைப் பற்றி ஏற்கனவே சுருக்கமாக சொல்லியிருக்கிறேன், விரைவில் மாலைமலரின் மீண்டும் புதிய தலைப்பில் ஜோதிடத்தின் வேறொரு பரிமாணத்தை எழுத இருக்கிறேன். அதில் இதைப்பற்றி விரிவாக எழுதுகிறேன். வக்ரசனி நவாம்சத்தில் உச்சம் பெற்றால் உச்ச பலனையே தரும்.

ஒருவாசகர், சென்னை-29

கேள்வி:

திருமணமாகி 22 வருடங்கள் ஆகிறது. மணமான நாள் முதல் இன்று வரை எனக்கும் என் மனைவிக்கும் ஒரே சண்டை சச்சரவாக இருக்கிறது. நிம்மதியே இல்லை. 22    வருடத்தில் ஒரு நாள் கூட என் மனைவி என்னை மதித்ததில்லை. எப்போதும் ஏடாகூடமாக பேசிக்கொண்டும், சண்டை போட்டுக்கொண்டும் உள்ளார். ஜோதிடர்கள் உனக்கும் உன் மனைவிக்கும் ஜாதகப் பொருத்தம் சரியில்லை. பொருத்தமில்லாமல் திருமணம் செய்துவிட்டார்கள். அதனால் தான் சண்டைவருகிறது. வேறுவழியில்லை என்று சொல்லிவிட்டார்கள். உண்மையிலேயே எனக்கும் என் மனைவிக்கும் பொருத்தம் இல்லையா? நிம்மதியில்லாத வாழ்க்கைக்கு என்ன காரணம்? எனக்கு இப்போது 54 வயதாகிறது. இதுவரை எந்த அரசு வேலையும் கிடைக்கவில்லை. தனியார் வேலைக்கு சென்றால் ஆறுமாதத்தில் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். அதனால் இனிமேல் எனக்கு அரசுவேலை கிடைக்குமா? வயது வந்த இரண்டு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். இதுவரை அவர்களுக்கு 10  ரூபாய் கூட சேர்த்துவைக்கவில்லை. அவர்கள் திருமணத்திற்குள் பணம் சம்பாதிப்பேனா? எனக்கும் என் மனைவிக்கும் ஜாதகப் பொருத்தம் உள்ளதா? இனி மேலாவது நிம்மதியாக இருப்பேனா?

பதில்:
குரு ராகு
16-9-1963, அதிகாலை 3 மணி, தஞ்சாவூர்  ல
சனி சந்,சூ
கேது செவ் பு,சு
(கடகலக்னம். சிம்மராசி. 2-ல் சூரி, சந். 3-ல் புத, சுக். 4-ல் செவ். 6-ல் கேது. 7-ல் சனி. 9-ல் குரு. 12-ல் ராகு. 16-9-1963, அதிகாலை 3 மணி, தஞ்சாவூர்)

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை உங்கள் பேரன் பேத்திகளின் திருமணம் அன்று பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

திருமணம் என்பது நம்முடைய கர்ம வினைகளின்படி நடைபெறுகிறது. இங்கே யாருக்கும் மனைவி, குழந்தை, பெற்றவர்களைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை. அனைத்தும் நம்முடைய கர்மாவின்படி பரம்பொருள் கொடுப்பதுதான். இந்த மனைவிதான் வேண்டும் என்று நீங்களும் தவம் இருக்கவில்லை, இவர்தான் என் கணவராக வேண்டும் என்று உங்கள் மனைவியும் அடம் பிடித்திருக்க மாட்டார்.

ஜாதகப்படி லக்னத்தை பாபத்துவம் பெற்ற சனி பார்ப்பதால் நீங்கள் எதற்கும் வளைந்து கொடுக்காத, எதிலும் நிறைவில்லாதமனிதராக இருப்பீர்கள். எதற்கும் ஒத்துப் போக மாட்டீர்கள். நிலையில்லாத குணம் கொண்டவர் நீங்கள். இது போன்றவர்கள் ஜோதிடத்தின் துணை கொண்டு, ஆன்மீக வழியிலும், யோகா போன்றவைகளின் மூலமும் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்வதன் மூலமும் நல்ல வாழ்க்கையை பெற முடியும்.

வேலைக்குச் சென்றால் ஆறுமாதத்தில் அனுப்பி விடுகிறார்கள், பத்துரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை என்று உங்களைப்பற்றி நீங்களே சொல்லி விட்ட பிறகு இங்கே ஜோதிடம் எதற்கு? காசில்லாதவனை எந்த மனைவிதான் மதிப்பாள்? ஜாதகப்படி உங்கள் மனைவியை விட நீங்கள்தான் எதையாவது ஏடாகூடமாக செய்பவராக இருப்பீர்கள். ஒரு வேலையில் நிரந்தரமாக இருந்து குடும்பத்தைக் காப்பாற்றும் கணவனை எந்த மனைவியும் மதிக்கவே செய்வாள்.

என்னதான் தோற்றுப் போன ஒரு கணவனாக இருந்தாலும் வயது வந்த பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு இதுவரை ஒன்றும் சேர்த்து வைக்கவில்லையே என்று உளமார வருந்தும் நீங்கள் ஒரு தகப்பனாக தோற்றுப் போக மாட்டீர்கள். ஜாதகப்படி லக்னத்தை குரு வலுப்பெற்றுப் பார்ப்பதாலும், சிம்ம ராசிக்கு தொழில் ரீதியிலான சிக்கல்கள் தீர்ந்து விட்டதாலும் இந்த வயதிலும் உங்களால் சம்பாதிக்க முடியும். வரும் ஏப்ரலுக்குப் பிறகு உங்களுக்குச் சாதகமாக கிரக நிலைகள் மாறுகின்றன. இனிமேல் உங்களுக்கு நிரந்தரமான வேலை, தொழில் அமையும். மகள்களின் திருமணத்திற்கு நீங்களாகவே சம்பாதிப்பீர்கள். கவலை வேண்டாம்.

என் மகளின் பிறந்த நேரம் சரியா? தவறா?

ஏ.மணிமேகலை, திண்டுக்கல்-5.

கேள்வி:

எனது மகள் இரவு 9.15 மணிக்கு பிறந்தாள். ஆனால் ஜாதகம் கணிக்க போகும் போதுஜோதிடர் பெண்குழந்தை 9.15 மணிக்கு பிறந்திருக்க இயலாது என்றும், 8.15 நிமிடத்தில் தான் பிறந்திருக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த ஜோதிடர் சொன்னது சரியா? ஆனால் என்மகளின் பிறந்தநேரம் உறுதியாக. 9.15 தான். அவர் ஏன் அப்படி சொல்கிறார்? லக்னத்தில்கேது 7-ல் செவ்வாய், ராகு இருப்பதால் தோஷம் உள்ளது என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். பலஜோதிடர்கள் பலவிதமாக பரிகாரங்களை செய்ய சொல்வதால் குழம்பிபோய்  இருக்கிறோம். மகளுக்கு திருமணம் எப்போது? தங்கள் பதில்களை மாலைமலர் வழியாக தொடர்ந்து படித்துவரும் எனக்கு தெளிவான விளக்கம் தாருங்கள்.

பதில்:

இது போன்ற விளக்கத்தை ஏற்கனவே மாலைமலரில் கொடுத்திருக்கிறேன். ஆயினும் உங்கள் மகள் திருமணப் பருவத்தில் இருப்பதால் மீண்டும் ஒருமுறை இதைப் பற்றி விளக்குகிறேன்.

ஜோதிடத்தில் ஆண்காலம், பெண்காலம் என்று ஒரு விதி சொல்லப்பட்டிருக்கிறது. வேதஜோதிடத்தில் உள்ள ஏராளமான நுணுக்கங்களில் இதுவும் ஒன்று. இந்த விதியின்படி ஆண்காலம் என்று சொல்லப்படுகிற நேரத்தில் பெண்குழந்தை பிறந்தால் அக்குழந்தை ஆணுக்குரிய தைரியத்துடனும், உறுதியுடனும், பெண்மையை விட ஆணுக்குரிய குணங்கள் தூக்கலாகவும் இருக்கும். பெண் காலத்தில் ஆண்குழந்தை பிறந்தால் அக்குழந்தை பெண்ணுக்குரிய  நிதானம், பொறுமை போன்ற அதிகமான பெண்மைக் குணங்களுடன் இருக்கும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் சில ஜோதிடர்கள் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு ஆண் காலத்தில் ஆண் குழந்தை மட்டுமே மட்டுமே பிறக்கும். பெண் காலத்தில் பெண் குழந்தை மட்டுமே பிறக்கும் என்று வாதாடுகிறார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் பெற்றோர்களுக்குத் தெரியாமலே அல்லது சொல்லாமலே அவர்கள் கொடுத்த நேரப்படி ஜாதகம் கணிக்காமல் இந்த ஆண்காலம் பெண் காலம் விதிப்படி பிறந்த நேரத்தை திருத்தி ஜாதகம் கணிக்கிறார்கள். இது தவறானது.

பிறந்த வினாடிவரை நேரத்தை துல்லியமாக தெரிந்து கொள்ள கடிகாரங்களும், தொழில்நுட்பங்களும் வந்துவிட்ட இக்காலத்தில் இதுபோன்ற புரிந்து கொள்ளாத ஜோதிடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்போதைய இளம் தலைமுறை ஜோதிடர்கள் இவற்றைச் செய்வதில்லை. எனவே உண்மையில் குழந்தை பிறந்த நேரமே இறுதியானது. ஜோதிடத்தில் உள்ள ஏராளமான விதிகள் இது போன்று அனுபவமற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவைதான்.

மகள் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் ஏழாமிடத்தில் செவ்வாய், ராகு இணைந்திருப்பது தாமத திருமணத்தைக் கொடுக்கும் அமைப்பு. இதைதவிர தற்போது மேஷ லக்னத்திற்கு நன்மைகளைச் செய்யாத புதன் தசை நடக்கிறது. எனவே அடுத்து ஆரம்பிக்கும் கேது தசை, சுக்கிர புக்தியில்தான் திருமணம் நடக்கும். ஒருமுறை மகளின் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலையே ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்து வாருங்கள்.

3 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 175 (20.2.18)

  1. ஐயா வணக்கம்.என் மகள் 24/12/2001.10 35 Am.மீன ராசி. ரேவதி.கும்ப லக்னம். இரு திருமன அமைப்பு உள்ளதா.எந்த. வயதில் திருமனம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *