adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 210 (23.10.18)

ர. மல்லிகா, மேட்டுப்பாளையம்.

கேள்வி :

பிறந்தது முதலே மிகவும் கஷ்டப்படுகிறேன். கணவர் குடிப்பழக்கம் உள்ளவர். முதலாம் ஆண்டு பிஎஸ்சி விலங்கியல் படிக்கும் எனது மகள் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவருடைய விருப்பம் நிறைவேறுமா, எங்களின் கஷ்டம் நீங்குமா என்று கூறுங்கள்.

பதில் :
சனி குரு ரா
08-10-2000 காலை 8.20 கோவை
சந் செ
கே ல சு பு சூ

செய்ய ஆசைப்படுவது வேறு, செய்துதான் ஆகவேண்டும் என்பது வேறு. ஒருமுகப்பட்ட மனதோடு கவனச் சிதறல்கள் இன்றி ஒரு விஷயத்தை செய்தவர்கள் இலட்சியத்தை அடைந்திருக்கிறார்கள் என்பதை மகளுக்குச் சொல்லுங்கள். மகள் ஜாதகப்படி லக்னத்திற்கு 10-க்குடைய சந்திரன் தன் வீட்டையே பார்த்து, ராசிக்கு 10-க்குடையவர் ஆட்சி பெற்ற நிலையில், சிம்மத்தில் செவ்வாய் அமர்ந்து, சூரியனைக் குரு பார்ப்பதால் அரசு வேலை கிடைக்கும். வாழ்த்துக்கள்.

ஏ. கே.சுப்ரமணியன், சென்னை-44

கேள்வி :

கடுமையாக முயற்சித்தும் மகனுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. செல்போன் மூலமாக அறிமுகமான வேறு இனப்பெண் ஒருவரை மகன் காதலித்தான். அந்தப் பெண்ணும் இரண்டுமுறை வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்கு வந்து விட்டது. திருமணத்திற்கு முன் ஒரு பெண் நம் வீட்டில் வந்து தங்குவதற்கு மனம் இடம் தரவில்லை. அதனால் குடும்ப நண்பர் வீட்டில் தங்க வைத்து மறுநாள் காலை அந்தப் பெண்ணை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். மகனின் ஜாதகத்தை இரண்டு ஜோதிடரிடம் பார்த்ததில் ஒரு ஜோதிடர் சொந்தத்தில் பெண் அமையும் என்றும், இன்னொரு ஜோதிடர் வேறு இனப்பெண் தான் அமையும் என்றும் கூறுகிறார். இதில் எது சரி என்பதையும், மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதையும் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பதில் :
சந் செ  குரு
ரா
10.02.1989 அதிகாலை 05:10 சென்னை
ல சு பு சூ கே
 சனி

இந்தக் காலத்துப் பெண்கள் எதில் துணிச்சலாக இருக்கிறார்களோ இல்லையோ, பெற்றவர்களுக்கு தெரியாமல் எவ்வளவு தூரமானாலும் காதலிப்பவனைப் போய்ப் பார்த்து இரவு தங்குவதில் துணிவாகத்தான் இருக்கிறார்கள். சமூக மாற்றமும், தொழில்நுட்ப வசதிகளும் இதைத்தான் செய்திருக்கின்றன.

மகன் ஜாதகப்படி லக்னத்திற்கு ஏழாமிடத்தை செவ்வாயும், ராசிக்கு ஏழாமிடத்தை சனியும் பார்க்கும் நிலையில், எட்டுக்குடைய சூரியனும் களத்திர ஸ்தானமான ஏழைப் பார்ப்பதால் அந்நியப் பெண்ணே மனைவியாக அமைவார். லக்னத்திற்கு 2ல் ராகுவும், ராசிக்கு இரண்டில் செவ்வாயும் அமர்ந்து தற்போது சுக்கிர தசையும் அவருக்கு நடப்பதால் அவரது இஷ்டப்படியே விருப்ப திருமணமாக அடுத்த வருடம் தை மாதத்திற்குப் பிறகு அமையும். வாழ்த்துக்கள்.

கே.தங்கமாயன், மதுரை-12

கேள்வி :

ஒருவருக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தந்து உற்சாகப்படுத்தும் தலைசிறந்த குருவிற்கு வணக்கம். நான் ஜோதிடம் கற்றுள்ளேன். அடுத்தவர்களுக்கு பலன் சொல்லி அது பலித்தாலும் என் குடும்பத்தினர் என்னுடைய ஜோதிடத் திறமையை நம்புவதில்லை. எனவே என் பெண்ணின் ஜாதகத்தை அனுப்பி இருக்கிறேன். மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது திருமணம் செய்யலாமா?

பதில் :
சனி கே
14-09-1996 காலை 11.45 மதுரை
சுக் செ
சூ
குரு சந் பு ரா

மகள் ஜாதகப்படி லக்னத்திற்கு 10-க்குடைய சூரியன் ஆட்சி, ராசிக்கு 10க்குடைய புதனும் உச்சம் எனும் அமைப்பில், சிம்மத்தையும், சிம்மாதிபதி சூரியனையும் வலுப் பெற்ற குரு பார்ப்பதால் அரசுவேலை உறுதியாகக் கிடைக்கும். விளையாட்டுத்தனம் இல்லாமல் நன்கு முயற்சி எடுத்துப் படித்தால் பெரிய அதிகாரி ஆகலாம். லக்னாதிபதி செவ்வாய், சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாக இருப்பது இதை உறுதி செய்கிறது.

கே. கோடீஸ்வரன், மயிலாடுதுறை.

கேள்வி :

திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். 2016ம் ஆண்டுவரை ஐடி கம்பெனியில் வேலை செய்தேன். சில காரணத்தினால் வேலையை விட்டு விட்டு, அதன் பிறகு இன்னும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. 2017 டிசம்பரில் வெளிநாட்டில் ஒரு வேலைவாய்ப்பு வந்தது. அதுவும் தடையாகி விட்டது. வெளிநாட்டிற்கு போக எனக்கு ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைக்குமா? என் ஜாதகத்தில் வேலை செய்வது அல்லது தொழில் செய்வது எந்த அமைப்பு உள்ளது? ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாமா? எதிர்காலத்தை நினைத்து அச்சமாக இருக்கிறது. மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். வழி காட்டுங்கள்.

பதில் :
சூ செ பு ரா
14.6.1983 மதியம் 1.45 நெய்வேலி
சந் சுக்
கே குரு சனி

ஒருவர் வெளிநாட்டில் சென்று பிழைக்க வேண்டும் அல்லது வசிக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் 8, 12மிடங்களின் அதிபதிகள் சுபத்துவமாகி, தங்களுக்குள் சம்பந்தம் பெற்ற நிலையில், சர ராசிகளில் இருக்கும் தசா, புக்திகளும் நடக்குமாயின் அவர் உறுதியாக வெளிநாடு சென்று பிழைப்பார்.

உங்கள் ஜாதகப்படி கன்னி லக்னமாகி, எட்டுக்குடைய செவ்வாயும் 12-க்குடைய சூரியனும் இணைந்து, சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து, குருவின் பார்வையையும் பெற்று சுபத்துவமாக உள்ளதாலும், வெளிநாட்டைக் குறிக்கும் சர ராசியான கடகத்தில் தற்போதைய தசாநாதன் சுக்கிரன் அமர்ந்திருப்பதாலும், உறுதியாக வெளிநாடு செல்வீர்கள். ஒருவரை வெளிநாடு செல்ல வைக்கும் கடகாதிபதி சந்திரனின் புக்தி கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்ததும் உங்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு வந்திருக்கிறது. ஆயினும் அதை தவறவிட்டு விட்டீர்கள்.

அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு பிறகு நீங்கள் வெளிநாட்டில்தான் இருக்கவேண்டும் என்கின்ற அமைப்பு இருப்பதால் 2019ல் வெளிநாடு செல்ல முடியும். சொந்தத் தொழில் இப்போது வேண்டாம். ஷேர் மார்க்கெட் நான்கு வருடங்களுக்கு கை கொடுக்காது. எனவே ஒருமுகப்பட்ட முனைப்பாக வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்யவும். அந்நிய தேசத்தில் நல்ல வாழ்வு கிடைக்கும். வாழ்த்துக்கள்.

லலிதா, சென்னை - 92

கேள்வி :

திருமணம் ஆனதிலிருந்து ஒரே பிரச்சினைதான். சில வருடங்களாக ஹார்மோன் இம்பேலன்ஸ் வியாதியினால் கஷ்டப்படுகிறேன். நிறைய மருத்துவச் செலவு செய்தும் பயனில்லை. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். வியாதி எப்போது தீரும்? வாழ்க்கையில் நல்ல காலம் உள்ளதா? நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்குமா? இந்தப் பிறவியே போதுமென்றாகிவிட்டது. ஜாதகப்படி மறுபிறவி உண்டா?

பதில் :
சனி
ரா
30.11.1969 மாலை 6.51 ராஜபாளையம்
சந்
செ கே
சூ சு பு   குரு

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாமிடத்தில் சுப கிரகங்கள் அமர்ந்து, அந்த இடத்தை வலுப்படுத்தி, அவயோக கிரகங்களின் தசையும் நடக்குமாயின் அவருக்கு கடன், நோய், எதிரித் தொல்லைகள் இருக்கும்

உங்கள் ஜாதகப்படி ஆறில் குரு அமர்ந்த நிலையில், கடந்த 18 வருடங்களாக ரிஷப லக்னத்தின் அவயோக கிரகங்களான சூரிய, சந்திர, செவ்வாய் தசைகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு பெண்ணிற்கு ஹார்மோன் பிரச்சனைகளை கொடுக்கும் ஆண்கிரகமான செவ்வாய் உச்ச நிலையில் இருக்கிறார். அவரது பார்வையில் இருக்கும் மாரகாதிபதி சந்திரனின் தசை ஆரம்பித்ததிலிருந்து நீங்கள் இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகமாக செய்திருக்க வேண்டும்.

செவ்வாய் தசை வரை இன்னும் ஏறத்தாழ நான்காண்டு காலத்திற்கு நோய் தீருவதற்கு வாய்ப்பில்லை. அடுத்து வரக்கூடிய ராகு தசை, சனியின் வீட்டில் அமர்ந்து ராகுவும், வீடு கொடுத்த சனியும், குருவின் பார்வையில் இருப்பதால் ஓரளவு நன்மைகளைத் தரக்கூடியது. ராகுதசை முதல் நோய் குணப்படும். அதுவரை பொறுத்திருங்கள். 12-ம் இடத்தோடு செவ்வாய், சனி ஆகிய இரண்டு பாபக் கிரகங்கள் தொடர்பு கொள்வதால் உங்களுக்கு மறுபிறவி இருக்கிறது. வாழ்த்துக்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 210 (23.10.18)

  1. ஐயா நான் பிறந்த போதிலிருந்து தற்போது வரை மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஏன் வாழ்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை ஐயா இரண்டு டிகிரி முடித்துள்ளேன் கடந்த
    7 வருடத்தில் 2 வருடம் மட்டுமே பணி புரிந்தேன் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வி அவமானம் வெறுமையான வாழ்க்கை ஐயா என்னிலை எப்போது மாறும் பிறந்த நாள் 21-11-1990 நேரம் 12-35am கோயமுத்தூர் ராசி தனுசு பூராடம் நட்சத்திரம் 3 ஆம் பாதம் லக்னம் சிம்மம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *