adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சந்திரனின்சூட்சுமங்கள் C-006 – Chanthiranin sutchumangal

ஒளிக் கிரகங்களில் இரண்டாவதான சந்திரன் ஜோதிடத்தில் தாயைக் குறிக்கும் கிரகமாக கருதப்படுபவர். மாதாகாரகன் என்ற பெயரால் வேதஜோதிடம் இவரை அழைக்கிறது. நம் மனதை இயக்குபவர் என்ற அர்த்தத்தில் மனோகாரகன் என்றும் சொல்லப்படுவது உண்டு.

கிரகங்களில் சனி மெதுவான இயக்கத்தை உடையவர் என்றால் சந்திரன் வேகமாக நகரும் இயல்பை உடையவர். தனது சுற்றுப்பாதையை முடிக்க சனி ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், சந்திரன் பூமியை சுமார் இருபத்தியெட்டு நாட்களில் சுற்றி முடித்து விடுவார். எனவே கிரகங்களில் வேக இயக்கம் கொண்டவர் இவர்தான். பூமிக்கு அதிக ஒளி தரும் கிரகங்களில் சூரியனுக்கு அடுத்த இடம் இவருடையது.

வேதஜோதிடத்தில் சந்திரனைத் தாயாக உருவகப்படுத்துவதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. எப்படியெனில் ஒரு அம்மாவை உருவாக்குபவர் சந்திரன்தான். அதாவது ஒரு பெண் தாயாவதற்கு உரிய அனைத்து அமைப்புகளும் சந்திரனால்தான் உருவாக்கப்படுகின்றன.

ஓவரிஸ் எனப்படும் பெண்களின் கருமுட்டைக்குக் காரணமானவர் சந்திரன். பெண்களின் மாதவிடாய் சுழற்சி தோராயமாக 28 நாட்கள் என்றிருப்பதே சந்திரனுக்கும், தாய்மைக்கும் உள்ள சம்பந்தத்தை எளிமையாக விளக்கும். ஒரு பெண்ணின் மாதவிடாய் நாட்கள் எனப்படுவது சந்திரன் பூமியைச் சுற்றி வரும் நாட்களுடன் தொடர்புடையது. இதுவும் மனித வாழ்வில் கிரகங்களின் தாக்கத்தை உணர்த்தும் ஒரு நிகழ்வுதான்.

ஜோதிடப்படி மனித மனங்களை ஆள்பவர் மற்றும் கட்டுப்படுத்துபவர் என்ற பொருளில் சந்திரன் மனோகாரகன் என்று அழைக்கப்படுகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நிலை பிறழ்வதும், பாதிக்கப்படுவதும் நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான்.

சந்திரனின் தனிச்சிறப்பு என்று பார்த்தோமேயானால் மற்ற எட்டு கிரகங்களும் சுபர் அல்லது அசுபர் என்று நல்ல கிரகமாகவோ அல்லது கெட்ட கிரகமாகவோ இருக்கும் நிலையில் சந்திரன் ஒருவர் மட்டுமே பாதி நாட்கள் சுப கிரகமாகவும், மீதி நாட்கள் பாப கிரகமாகவும் மாறக் கூடியவர்.

பவுர்ணமியன்று சூரியனுக்கு நேரெதிரில் இருந்து சூரியனின் முழு ஒளியையும் வாங்கி பூமிக்குப் பிரதிபலிக்கும் நிலையில் முழுச் சுபராகவும், அமாவாசையை நோக்கி ஒளி குறைந்து செல்லும்போது சிறிது சிறிதாக ஒளி குறையும் நிலையில் பாபராகத் துவங்கி ஒளியற்ற அமாவாசையன்று முழு பாபராகவும் கருதப்படுவார்.

கிரகங்கள் பூமிக்குத் தரும் ஒளிப் பிரதிபலிப்பு நிலைகளை வைத்துத்தான் சுப கிரகங்கள், பாப கிரகங்கள் என்று நமது ஞானிகளால் பிரிக்கப்பட்டன என்ற எனது ஆய்வு முடிவுக்கு இவரது தேய்பிறை, வளர்பிறை நிலைகளும் வலுச் சேர்த்தன.

சந்திரனால் பெறப்படும் முக்கிய யோகமாக அதியோகம் எனப்படும் சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் இருப்பது சொல்லப்படுகிறது. இது ஒரு சிறப்பான யோகமும் ஆகும்.

இதன் உண்மையான சூட்சுமம் என்னவெனில், ஏற்கனவே நன்மைகளைத் தரக் கூடிய சுப கிரகங்கள் சந்திரனுக்கு எதிரில் அமர்ந்து, அதாவது அவருக்கு நேர் எதிரான ஏழாம் வீட்டில் இருந்து சந்திர ஒளியைக் கூடுதலாகப் பெற்றால் இன்னும் வலுப் பெற்று அந்த ஜாதகருக்கு பூரண நன்மையைச் செய்வார்கள் என்பதுதான்.

இதில் சந்திரன் இருக்கும் வீட்டிற்கு நேரெதிரே இருக்கும் வீடான ஏழாம் வீட்டில் விழும் சந்திர ஒளி அதன் இருபுறமும் உள்ள ஆறாம் வீட்டிலும், எட்டாம் வீட்டிலும் சிதறி அந்த வீடுகளின் மீதும் படும் என்பதனால்தான் சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் சுப கிரகங்கள் இருந்தால் வலுவான அதியோகம் என்று நமது ஞானிகளால் சொல்லப்பட்டது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவெனில், அதியோகம் எல்லா நிலைகளிலும் பலன் தராது. இந்த யோகத்தை ஏற்படுத்தும் சந்திரன் தன் எதிரே ஆறு, ஏழு, எட்டாம் வீடுகளில் இருக்கும் சுப கிரகங்களுக்கு உண்மையிலேயே ஒளியை வழங்கக்கூடிய தகுதியில் இருக்க வேண்டும்.

அதாவது மதியாகிய சந்திரன் பவுர்ணமியை நெருங்கும் சமயத்திலோ, பவுர்ணமியிலோ, சூரியனுக்கு கேந்திரங்களில் இருக்கும் போதோ அல்லது ரிஷபம், கடகம் ராசிகளில் உச்சம், ஆட்சி போன்ற நிலைகளில் சுப சந்திரனாக இருந்தால் மட்டுமே தன் எதிரில் இருக்கும் கிரகங்களுக்கு ஒளி வழங்கி அவற்றை வலுவூட்டி அதியோகம் தரவைக்க முடியும்.

மேற்கண்ட நிலைகளில் இல்லாமல் சந்திரன் தேய்பிறையாகவோ, நீச நிலையிலோ இருந்து ஒளி குன்றிய நிலையில் அதியோகம் ஏற்படுமாயின் அது முழுமையான யோகம் தராது.

சந்திரனுக்குள்ள மிக முக்கியமான இன்னொரு சிறப்பம்சம் என்று பார்த்தோமேயானால் பனிரெண்டு லக்னங்களில் சந்திரனின் கடகமே மிகச் சிறப்பான முதன்மை லக்னமாக நமது மூலநூல்களில் சொல்லப்படுகிறது.

உலக சரித்திரத்தை ஏதேனும் ஒருவகையில் முன்னெடுத்துச் சென்று, மாற்றிய சாதனையாளர்களில் பெரும்பாலோர் கடகத்தில் பிறந்தவர்களே. கடகத்திற்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு எனில், பனிரெண்டு ராசிகளும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு இவைகளில் சர ராசிகள் மட்டும் தனித்தன்மை வாய்ந்தவை என்று நமது ஞானிகளால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.

சர ராசிகள் எனப்படுவது மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகி நான்கு ராசிகளாகும். இவைகளை லக்னங்களாகக் கொண்டு பிறந்தவர்கள் தனித்தன்மையுடன் எதையும் சாதிக்கப் பிறந்தவர்களாக இருப்பார்கள். அதிலும் பெரும்பாலான சாதனையாளர்கள் சந்திரனின் வீடான கடகத்தில் பிறந்தவர்கள்தான்.

இதன் சூட்சுமம் என்னவெனில் கடகம் தவிர்த்த மற்ற மேஷம், துலாம், மகரம் ஆகிய ராசிகளின் அதிபதிகள் இந்த ராசிகள் தவிர்த்து இன்னொரு கெட்ட வீட்டிற்கும் அதிபதியாகி லக்னாதிபத்தியத்தில் முழுமை அடைய மாட்டார்கள்.

அதாவது மேஷ, துலாம் லக்னத்தில் பிறப்பவர்களுக்கு லக்னாதிபதியே எட்டிற்குடையவர்களாகவும், மகரத்தில் பிறப்பவர்களுக்கு லக்னாதிபதி சனியே இரண்டிற்குடைய மாராகதிபதியாகவும் ஆவார் எனும் நிலையில் சந்திரன் ஒருவர் மட்டுமே கடகம் எனும் சர ராசிக்கு லக்னாதிபதி என்ற பரிபூரண நிலையை மட்டும் அடைந்து ஜாதகருக்கு முழு நன்மை செய்வார். எனவேதான் கடகம் சிறப்பு நிலை பெற்றது.

சூரியன் நிலையாக இருக்கிறது என்று கண்டு பிடித்தது, இந்தியர்களா? ஐரோப்பியர்களா?

ஜோதிடமும் வானியலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று சொல்லப்படுவதன் நிஜக் காரணம், முழுமையான விஞ்ஞான உண்மைகள் மறைமுகமாக ஜோதிடத்தில் பொதிந்து கிடப்பதால்தான்.

உதாரணமாக சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்புதான் சூரியன் ஒரே இடத்தில் நிலையாக இருக்கிறது, பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்பது கண்டு பிடிக்கப்பட்டதாக நவீன வரலாற்றில் சொல்லப்படுகிறது. ஆனால் ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய வேதஜோதிட மூலநூல்களில் இது சொல்லப்பட்டிருப்பதை இப்போது விஞ்ஞானிகளில் சிலர் ஒத்துக் கொள்வது வரவேற்கத்தக்க விஷயம்.

பனிரெண்டு ராசிகளை அவைகளின் இயக்கத்திற்கு ஏற்ப நெருப்பு, காற்று, நிலம், நீர் என நான்காகப் பிரித்த நமது ஞானிகள், மேஷத்தை கட்டுக்கு அடங்காத காட்டு நெருப்பு எனவும், சிம்மத்தை ஒரே இடத்தில் நிலைத்து இயங்கும் நெருப்பு எனவும், தனுசை இவ்விரண்டு தன்மைகளும் கொண்ட இயக்க நெருப்பு எனவும் சொல்லியிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இம்மூன்றில் நிலைத்த நெருப்பு ராசியான சிம்மத்தை மட்டுமே சூரியனின் வீடு எனக் காட்டி, அதை நடுவில் இருத்தி, சிம்மத்தின் இருபுறமும் ராசிகளை அமைத்த விதத்திலேயே சூரியன் நிலையானது அதனை மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றன என்பதை தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டார்கள் என்பதை ஓரளவு வானியல் அறிவுள்ளவர்கள் அனைவருமே ஒத்துக் கொள்வார்கள்.

அவர்களுக்குத் தெரிந்து விட்டதே, பிறகு ஏனய்யா ஐரோப்பியர்களைப் போல எல்லோருக்கும் தெரியும்படி அறிவிக்கவில்லை? ஏன் வெளியே டமாரம் அடிக்கவில்லை?

நல்ல கேள்வி...!

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட அந்தக் காலத்தில் இந்த விஷயத்தைச் சொன்னாலும் கேட்பதற்கு ஆளில்லை. பெரும்பான்மை அறிவாளிகளைக் கொண்ட ஒரு அறிவார்ந்த சமூகம் அப்போது இல்லை. கேட்பதற்கு ஆள் இருந்தால்தானே அய்யா சொல்ல முடியும்?

ஆகவேதான் தான் அறிந்தது - தான் கண்டுபிடித்தது - அதைப் புரிந்து கொண்டவனுக்கு மட்டுமே பரிமாறப்பட்டது.

உழுவதற்கும் விவசாயம் செய்வதற்கும் காட்டை வெட்டி, நிலத்தைச் சீர்படுத்தி உணவுத் தேவையைக் கவனிக்க கருவிகளைத் தேடிக் கொண்டிருந்தவனைப் போய், காலையில் சூரியன் எழும்போது கடற்கரையில் நிறுத்தி வைத்து “இதோ பார்... இந்தச் சூரியனை நாம்தான் சுற்றுகிறோம்” என்று நமது ரிஷிகள் சொல்லியிருந்தால், அவன், அவரை மேலும் கீழுமாகப் பார்த்து “அடப் போய்யா.. வேலையைப் பார்த்துக் கொண்டு” என்று சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் போயிருப்பான்.

இன்றும் கூட ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவமும், ஸ்டீபன் ஹாங்கிஸின் காலம் பற்றிய விளக்கங்களும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

தேவைகள் ஏற்படும் போதுதான் உண்மைகள் வெளிவந்து மதிக்கவும் படும். தேவைக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது அதைத் தெரிந்தவர்கள் மற்றும் உணர்ந்தவர்களிடம் மட்டுமே கடை விரிக்கப்படும். அப்படி முன்பே கண்டு பிடிக்கப்பட்ட நமது அறிவுச் செல்வங்களை நம்மவர்களே உணராமல் ஐரோப்பியர்களுக்கு ஜால்ரா போடுவதுதான் கொடுமை.

(பிப் 12 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

3 thoughts on “சந்திரனின்சூட்சுமங்கள் C-006 – Chanthiranin sutchumangal

  1. Simmam is the best house for the Moon. Simmam Makam Lord Subramanya birth star, Simmam Pooram, Meenskahi Devi and Aandal birth stars.
    Simmathil ulavum seerilam kiliye..!

    The author missed the key point of Moon in the Simmam. Meenam is also good for the Moon where Uthirataathi the Moon becomes the fifth house lord. As well Revathi, lord Rangnaathar’s birth star.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *